تفاصيل الكتاب
تنسيق
غلاف ورقي
صفحات
484
لغة
التاميلية
منشور
Feb 1, 2013
الناشر
வானதி பதிப்பகம்
الوصف
வியாசர் விருந்து (மகாபாரதம்) முதல் பதிப்புக்கு ராஜாஜி எழுதிய முன்னுரை: இரண்டரை ஆண்டுகளுக்குமுன் ஒருநாள் முதல் தாம்பூலம்என்று பெயரிட்டு சிசுபாலன் கதையைக் கல்கி இதழ் ஒன்றுக்கு எழுதினேன். அதைப் பார்த்துவிட்டு, மகாபாரதத்தில் இவ்வளவு அழகாக, நேற்று நடந்த விவகாரங்களைப் போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறதா! அப்படியானால் பாரதம் முழுதும் தொடர்ச்சியாக வாராவாரம் இப்படியே எழுதிக் கொண்டு போகலாமே என்று திரு டி.கே.சியும், கல்கி ஆசிரியரும் சொல்லி என்னைத் தூண்டினார்கள். அவர்கள் சொல்லுக்கு இணங்கினேன். பயத்துடன்தான் ஆரம்பித்தேன். பிறகு இந்த வேலையில் எனக்கே ஒரு மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகி முதிர்ந்து வந்தது. 107 அத்தியாயங்களாக முடிந்தது. மகாபாரதமும் இராமாயணமும் தெரியாதவர்கள் நம்முடைய நாட்டில் யாருமே இல்லை. ஆயினும் காலசேபக்காரர்களும், சினிமாக்காரர்களும், பாட்டிகளும் புகுத்திவிட்டிருக்கும் புதுச்சரக்குகள் கலக்காமல் சரியாகப் படித்துத் தெரிந்தவர்கள் வெகு சிலரே என்று நான் எண்ணுகிறேன்! புதுச்சரக்குகள் ரஸமாக இருக்கலாம். ஆனால் வியாசர் எழுதியதிலுள்ள கம்பீரமும், ஆழ்ந்த பொருளும் மற்றவர்கள் கையாளுவதில் கெட்டுப் போகின்றன. நம்முடைய நாட்டின் பழம்பெருங்காப்பியங்களில் ஒன்றும், அற்புதங்களுக்குள் பேரற்புதமாகிய வியாசருடைய மகாபாரதத்தைச் சரியாகச் சொல்லக் கேட்டு அனுபவித்தால், அறிவும் அடக்கமும் ஆத்ம சக்தியும் தமிழ்மக்கள் அடைவார்கள். இது என் எண்ணமும் ஆசையும். துவேஷமும், பொறாமையும், கோபமும் கொண்ட வாழ்க்கை உதவாது என்பதற்குப் பாரதத்தைப்போல் வேறு படிப்பு நம்முடைய தமிழ் மக்களுக்கு வேண்டியதில்லை. அன்புக்குரிய தமிழ் மக்களை எதிரில் வைத்துக்கொண்டு, கதை சொல்லுவது போல் மனத்தில் எண்ணி இந்த வியாசர் விருந்தை வாராவாரம் சிரமம் தோன்றாமல் பக்தியோடு எழுதி வந்தேன். கல்கி வாசகர்கள் அனைவரும் உற்சாகத்துடன் படித்து அனுபவித்து வந்ததாகவே நம்புகிறேன். முன்காலத்தில் குழந்தைகளுக்குப் புராணக் கதைகளைச் சொல்லப் பாட்டிமார்கள் இருந்தார்கள். இப்பொழுது பேரப்பிள்ளை பெற்றவர்களுக்கு அந்தப் பாக்கியமில்லை. வீட்டில் கதைகளைச் சொல்லுவாரில்லை. ஆகையால் புத்தக உருவத்தில் கதைகள் இருப்பது குடும்பங்களுக்குப் பயன்படலாம். இந்த பாரதக் கதைகளை ஒரு தடவை வாசித்துவிட்டால் மட்டும் போதாது. திரும்பத் திரும்பப் படிக்க வேண்டும். கிராமங்களில் இரவில் நல்ல விளக்கு வைத்துக்கொண்டு, படிக்கத் தெரியாத ஆண்களையும் பெண்களையும் கூட்டி உட்கார வைத்துக்கொண்டு, படித்துச் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் நாட்டில் அறிவும், அன்பும், தரும உணர்ச்சியும் பரவும்; அனைவரும் நன்மை அடைவோம். புத்தகத்தில் படங்கள் ஏன் போடவில்லை என்கிற கேள்விக்கு ஒரு சமாதானம். இராமாயணம், பாரதம் இந்தக் கதைகளுக்கு நம்முடைய சித்திரக்காரர்கள் போடும் படங்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் மூலப் பொருளுக்கும், கற்பனைக்கும் போதிய அளவில் பொருந்துவதில்லை என்பது என் அபிப்பிராயம் பீமனை ஒரு சாதாரண குஸ்திக்காரனைப் போலவும், அருச்சுனனை நட்டுவனைப் போலவும், கண்ணனைக் குழந்தையைப் போலவும் காட்டிக் குழந்தைகளைப் பழக்குவதில் எனக்குச் சம்மதமில்லை. படிக்கின்றவர்களுடைய மனோதருமத்துக்கே விட்டுவிடுவது நலம். - சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி